tamilnadu

img

தஞ்சாவூர் பெரியகோவில் விழா.... தமிழில் குடமுழுக்கு கோரிய மனுக்கள் தள்ளுபடி

மதுரை:
 தஞ்சாவூர் பெரியகோவில் குடமுழுக்கில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழிக்குமுக்கியத்துவம் அளிக்கப்படும் .யாகசாலை பூஜைகள் மற்றும் மகா அபிஷேகத்தின் போதும்திருமுறைகளைப் பாட ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரியமனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

இந்து சமய அறநிலையத் துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.தஞ்சாவூர் பெரியகோவிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் என இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தலாம் என்று கூறியிருக்கும் நீதிபதிகள், அறநிலையத் துறை அளித்த உறுதிமொழியின்படி, குடமுழுக்கு நடந்ததை உறுதி செய்து  நான்கு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தஞ்சாவூர் பெரியகோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும் என இராமநாதபுரத்தைச் சோ்ந்த திருமுருகன், தஞ்சாவூர் பெரியகோவில் உரிமைக் கழக ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன், நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் செந்தில்நாதன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.சென்னையைச் சேர்ந்த ரமேஷ், குடமுழுக்கை சமஸ்கிருதத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் கடந்த செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தபோது குடமுழுக்கை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதைப் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனா்.இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம். துரைசாமி, டி. ரவீந்திரன் ஆகியோர்   அடங்கியஅமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிமனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் வாதிடுகையில், ஆகமம் என்பது தமிழ்மொழிக்கானது, தமிழில் மட்டுமே பொருள் உள்ளது. சமஸ்கிருதத்தில் அதற்கான பொருள்இல்லை. அதோடு ஆகம விதிகள் தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் பின்பற்றப்படுவதில்லை. ஆங்கிலப் புத்தாண்டன்று இரவு நேர பூஜைகள் நடக்கிறது. அந்த வகையில் குடமுழுக்கு கடைசியாக சம்ஸ்கிருதத்தில் நடைபெற்றாக கூறப்பட்டாலும், அதில் மாற்றம் கொண்டு வந்து தமிழில் நடத்தலாம். எனவே தமிழிலேயே குடமுழுக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்றனா்.

சமஸ்கிருதத்தில் குடமுழுக்கை நடத்த வேண்டும் என மனுதாக்கல் செய்த மனுதாரா் தரப்பில், சமஸ்கிருதம் என்பது பேசும் மொழியல்ல, அது தேவ மொழியாகும். தஞ்சாவூரில் கடந்த முறை சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடைபெற்றதால் தான் பல்வேறு தீ விபத்துகள் நடத்துள்ளதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மனுதாரர்கள் வைத்துள்ளனர். இது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. எனவே சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, இந்து அறநிலையத்துறை தரப்பில், தஞ்சாவூர் பெரியகோவில் குடமுழுக்கில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. யாகசாலை பூஜைகள் மற்றும் மகா அபிஷேகத்தின் போதும் திருமுறைகளைப் பாட ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தமிழில் குடமுழுக்கு கோரிய மனுதாரர்கள் தரப்பு, தமிழில் நடத்தப்படும் எனக் கூறிவிட்டு, கருவறைகளில் அவ்வாறு தமிழ் மொழியில் நடத்தப் போவதில்லைக் என கூறப்படுகிறது.

எனவே, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குடமுழுக்கை நடத்தி கண்காணிக்க வேண்டும் என கோரப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், இந்து அறநிலையத் துறை தமிழில் நடத்துவதற்கு உத்தரவாதம் அளித்துள்ளதால், ஓய்வு பெற்ற நீதிபதி நியமனத்திற்கு அவசியமில்லை என தெரிவித்தனா்.நீதிபதிகள் அனைத்து தரப்பு வாதங்களை பதிவு செய்துகொண்டு, மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.இந்த நிலையில், தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிய மனுக்கள் மீது வெள்ளிக்கிழமை காலை தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது, தஞ்சாவூர் பெரிய  கோவிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த இந்து அறநிலையத் துறைக்கு அனுமதி அளித்தும், தமிழில் குடமுழுக்கு நடத்த உத்தரவிடக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள்உத்தரவிட்டனர்.

;